ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று, கனடிய குடிவரவுத் துறையினரால் இந்த வாரம் டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனால் வான்கூவரில் நடைபெறவிருந்த கால்பந்து உலகக் கிண்ணத்துக்கு முந்தைய ஃபிஃபா கூட்டத்தில் அவர்கள் பங்கெடுக்க முடியாமலும் போனது.
ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், பொதுச்செயலாளர் ஹெதாயத் மொம்பேனி மற்றும் அவரது துணை ஹமீத் மொமேனி உள்ளிட்ட தூதுக்குழு உறுப்பினர்கள், செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்தபோதிலும் திருப்பி அனுப்பப்பட்டதாக தெஹ்ரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் 2026 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக, 211 உறுப்பு சங்கங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் வியாழக்கிழமை (29) நடைபெறவிருந்த ஃபிஃபா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரானிய தூதுக்குழு அதிகாரப்பூர்வ விசாக்களுடன் டொராண்டோவுக்குப் பயணம் செய்திருந்தது.
விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அதிகாரிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை மற்றும் ஈரானிய தேசத்தின் ஆயுதப் படைகளின் மிகவும் மரியாதைக்குரிய அமைப்புகளில் ஒன்றிற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு காரணமாக, அவர்கள் கிடைத்த முதல் விமானத்திலேயே துருக்கிக்குத் திரும்பியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று நடந்த இந்தச் சம்பவம், உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்பதைச் சுற்றியுள்ள நடைமுறை மற்றும் அரசியல் தடைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பெப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, FIFA-வின் நிகழ்ச்சி நிரலில் இதுவே மிகவும் அரசியல்ரீதியாக உணர்திறன் வாய்ந்த விடயமாகும்.
மூன்று நாடுகளில் நடத்தப்படும் ஒரு போட்டியில், ஈரான் தகுதி பெற்றிருந்தாலும், பயணம், விசாக்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தடைகளை அது நீக்கவில்லை.

















