கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றஞ்சாட்ட வொஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (14) இரவு தெரிவித்தார்.
ஒரு பெரும் நடுவர் மன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் இந்தக் குற்றச்சாட்டுத் தாக்கல் செய்யப்படும் காலக்கெடு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் அது விரைவில் நிகழக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.
கியூபாவின் 94 வயதான முன்னாள் ஜனாதிபதியும், ஃபிடல் காஸ்ரோவின் சகோதரருமானவர் மீதான சாத்தியமான குற்றச்சாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதை மையமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.
மனிதாபிமானக் குழுவான ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’வால் இயக்கப்படும் விமானங்களை, கியூபா 1996 இல் சுட்டு வீழ்த்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு உள்ளது என்று சிபிஎஸ் செய்திச் சேவை முன்னதாக தெரிவித்தருந்தது.
இது தொடர்பான கோரிக்கைகளுக்கு கியூபாவின் வெளிவிவகார அமைச்சுப் பிரதிநிதிகள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ட்ரம்ப்பின் நிர்வாகம், கியூபாவின் தற்போதைய கம்யூனிச அரசாங்கம் ஊழல் நிறைந்தது மற்றும் திறமையற்றது என்று கூறி, அதை மாற்ற முயன்று வருகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தி, மின்வெட்டுகளை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்புகளை விளைவித்து, அந்தத் தீவின் மீது ஒரு முற்றுகையை திறம்பட விதித்து, அதன் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ள நிலையில் இந்த அண்மைய நடவடிக்கை வந்துள்ளது.















