இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய தேர்வு முகமை நிறுனம் இன்று அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு மற்றும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த மே 3 ஆம் திகதி நடந்த முந்தைய பரீட்சை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
குறித்த பரீட்சை தொடர்பான தகவல்களுக்கு, பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை நிறுவனம் ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.
மே 3 அன்று நடைபெற்ற பரீட்சையில் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பங்கேற்றிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவு குறைந்தது ஏழு பேரைக் கைது செய்துள்ளதுடன், நாடு முழுவதும் பல இடங்களில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 2026-27 கல்வியாண்டிற்கு நீட் பரீட்சை விலக்கு அளிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) 14 ஆவது பிரிவைத் திருத்தும் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடித்தில், தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்காக மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார்.














