வெனிசுலாவின் தலைநகருக்கு மேற்கே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (24) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், தலைநகர் காரகாஸில் கட்டிடங்களை இடித்துத் தள்ளியதுடன், மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்தன.
இதனால், அந்த தென் அமெரிக்க நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகளும் பரவலான அழிவுகளையும் சந்தித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, கராகஸுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ (100 மைல்) தொலைவில் 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 7.5 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிக உயிரிழப்புகளும் பரவலான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது; இந்த பேரிடர் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்கலாம் என்று ஆரம்பகட்ட மதிப்பீட்டை வெளியிட்டது.
நாடு தழுவிய அளவில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
இருப்பினும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகளும் நேரில் பார்த்தவர்களும் தெரிவித்தனர்.
ஸ்பெயினிடமிருந்து நாட்டின் சுதந்திரத்தைப் பெற உதவிய 1821-ஆம் ஆண்டின் இராணுவ வெற்றியை நினைவுகூரும் பொது விடுமுறை நாளில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
தயார் நிலையில் மருத்துவமனைகள்
கராகஸ் தெருக்களில் தீயணைப்பு வண்டிகள் காணப்பட்டன, அங்கு சில கட்டிடங்களின் முகப்புகள் கணிசமாக சேதமடைந்திருந்தன.
கராகஸின் மருத்துவமனையில் (Hospital de Clinicas), காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக, இரவுப் பணியில் ஊழியர்கள் இரட்டிப்பாகப் பணியாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக அங்குள்ள ஒரு ஊழியர் கூறினார்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள், வெனிசுலாவின் பிரதான விமான நிலையத்தில் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது.
அதே நேரத்தில், கராகஸுக்கு அருகிலுள்ள கடலோர நகரமான லா குவைராவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சேதங்களை மதிப்பிடத் தொடங்கியதால், கராகஸின் சில நகராட்சிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை வகுப்புகளையும் உள்ளூர் நிகழ்வுகளையும் இரத்து செய்தன.
திரும்பப் பெறப்பட்ட சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கன்னித் தீவுகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி அபாய எச்சரிக்கையை விடுத்தது.
அத்துடன் அருபா, குராக்கோ மற்றும் போனாய்ர் ஆகிய தீவுகளையும் ஆபத்தான அலைகள் பாதிக்கக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
கரீபியன் தட்டும் தென் அமெரிக்கத் தட்டும் சந்திக்கும் நில அதிர்வுச் செயல்பாடு மிகுந்த மண்டலத்தில் வெனிசுலா அமைந்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, 1812-ஆம் ஆண்டில் மெரிடா மற்றும் கராகஸ் நகரங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பரவலான அழிவை ஏற்படுத்தியதில் சுமார் 30,000 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















