ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (25) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும் இதனால்,சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தினால் எவருக்கும் காயங்கள் அல்லது உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் அணுமின் நிலையங்களில் எந்தவித அசாதாரணமான சூழலும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோஹோகு (Tohoku) பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஜப்பானிய அரசு ஒரு அவசரக் குழுவை அமைத்துள்ளதாகவும், பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 50 கி.மீ (30 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் இவாடே (Iwate) மாகாணக் கடற்கரைக்கு அப்பால் அமைந்திருந்தது என்றும், கடல் மட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களைத் தவிர சுனாமியால் பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகின் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.
6 அல்லது அதற்கும் அதிகமான செறிவளவு (magnitude) கொண்ட உலகின் நிலநடுக்கங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் நிகழ்கின்றன.
2011 மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியை ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கமும் — இது ஜப்பானில் இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலிமையான நிலநடுக்கமாகும்.
அதைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான சுனாமியும் தாக்கின.
இந்நிகழ்வுகள், கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப் பிறகு உலகின் மிக மோசமான அணுசக்தி நெருக்கடியை உருவாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.















