பொலிஸ் சேவைக்கு எதிர்காலத்தில் 10,000 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை இன்று (29) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் விடயப்பொறுப்புள்ள அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 38,000 அதிகாரிகளுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும், இந்த நிலப்பற்றாக்குறைக்கு மத்தியிலேயே பொலிஸ் சேவையின் தினசரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், ஓய்வுபெறுதல் மற்றும் ஏனைய காரணங்களினால் ஆண்டுதோறும் சுமார் 2,000 அதிகாரிகள் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் அவர் மேலதிகமாகத் தெரிவித்தார்.













