ஈரானின் லாரக் (Larak) தீவில் இருந்த இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமையன்று (30) தமது படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூலை மாத இறுதியில் இருந்து அந்த இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்களில் இதுவே முதலாவதாகும்.
ஹார்முஸ் நீரிணையில், முக்கியத்துவம் வாய்ந்த பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தச் சிறிய ஈரானியத் தீவு, வளைகுடாவின் நுழைவாயிலில் உள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் கண்காணிக்கும் நிலையில் உள்ளது.
இதனால், ஈரான் தொடர்பான பதற்றம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் ஆகியவற்றில் இத்தீவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தெஹ்ரான் பதிலடி கொடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக, கடுமையான பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானையும் அதன் வணிகக் பங்காளிகளையும் தண்டிக்க ட்ரம்ப் நிர்வாகம் கடந்த சில வாரங்களாக முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளன.
ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் அமெரிக்க இராணுவம் நடத்திய முதல் தாக்குதல்கள் குறித்து விவரித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், லாரக் தீவில் இருந்த ஈரானின் இரண்டு ஏவுதளங்கள் மீது படைகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகள் இணைக்கப்பட்ட ரொக்கெட்டுகளை ஏவுவதற்கு இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவினர் (IRGC) தயாராகி வருவது காணப்பட்டது என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் பல வீரர்கள் மற்றும் குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறினர்.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.
எனினும் ஜோர்தானின் வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை அந்நாட்டின் ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்ததாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
கடந்த வாரம், நீரிணையில் சர்வதேச கடல் பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளும் வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது அகற்றப்பட்டுவிட்டதாகவோ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
மேலும், புதிய கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தாலும், ஈரானின் புரட்சிகரப் படைகளின் கடற்படை அக்கூற்றுகளை வெளிப்படையான பொய் என்று வர்ணித்ததுடன், ஈரானின் அனுமதியின்றி கப்பல்கள் செல்வதற்கு அது மூடப்பட்டே இருக்கிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்தியது.
ஈரான் தொடர்பான மோதலின் போது இந்த நீர்வழிப்பாதை முடக்கப்படுவதற்கு முன்பு, உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இதன் வழியாகவே கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













