இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வின்கோபேங்க் (Wincobank) பகுதியில் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த கவலையைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்டு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும், குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் மரணம் கத்திக்குத்துக் காயங்களால் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் மீது கொ*லைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி, குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் குற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது காணொளிப் பதிவுகள் வைத்திருப்பவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிறந்து சில நாட்களிலேயே பச்சிளம் குழந்தை கொடூரமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலதிக தகவல்களை வெளியிடுவதில் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

















