ஹொங்கொங்கின் பிரபல ஜனநாயக ஆதரவாளரான ஜோஷுவா வோங், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 29 வயதான வோங், புதன்கிழமை ஹொங்கொங் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு சீனா ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்திய பின்னர், வெளிநாடுகளிடம் ஹொங்கொங் மற்றும் சீனாவுக்கு எதிராக தடைகள் அல்லது பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியதாக வோங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு அரசியல்வாதிகளை சந்தித்தல், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச ஆதரவை கோருதல் உள்ளிட்டவை இடம்பெற்றதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
வோங், ஹொங்கொங்கின் ஜனநாயக இயக்கத்தில் இளம் வயதிலேயே முக்கிய முகமாக உருவெடுத்தவர். குறிப்பாக 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற “Umbrella Movement” போராட்டங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். பின்னர் ஜனநாயக ஆதரவு அரசியல் அமைப்பான Demosisto-வையும் இணைந்து உருவாக்கினார்.
இதற்கிடையில், வோங் ஏற்கனவே மற்றொரு தேசிய பாதுகாப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முதன்மைத் தேர்தல் தொடர்பான வழக்கிலேயே அந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
தற்போதைய குற்றச்சாட்டுக்கு மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். குற்றம் மிகவும் பாரதூரமானது என நீதிமன்றம் கருதினால், ஆயுள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் தண்டனை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி தண்டனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.















