கடந்த வாரம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நீர்மின் திட்டத்தின் அடைபட்ட சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளை, சீன மற்றும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் நேபாள மீட்புக் குழுவினர் திங்களன்று (01) தீவிரப்படுத்தினர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று ஏற்பட்ட பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்களின் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளம், நாட்டின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும், எல்லைக்கு அப்பால் சீனாவிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
இதில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
பனிப்பாறை சரிவுதான் இந்த பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மலைகளிலிருந்து பெருவெள்ளத்தால் அடித்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் — அவற்றில் பல அடையாளம் காணப்படாதவை — இமயமலைப் பகுதியின் சமவெளிகளில் நிலவிய ஈரப்பதமான வானிலையில் சிதையத் தொடங்கியதால், ஆழமற்ற குழிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 நீர்மின் திட்டங்களில் – குறிப்பாக சுமார் அரை டஜன் சுரங்கப்பாதைகளில் பணியாற்றியவர்கள் உட்பட – சிக்கியிருப்பதாகக் கருதப்படும் 933 தொழிலாளர்களைச் சென்றடைவதிலேயே கவனம் செலுத்தப்படுவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்களன்று நேபாள அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, 903 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்மின் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த 933 பேர் உட்பட மொத்தம் 4,247 பேர் காணாமல் போயுள்ளனர்.
சீனப் பகுதியில், கியிரோங் (Gyirong) மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 590 வெளிநாட்டினர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியிலிருந்து 323 வெளிநாட்டினர் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் குறிப்பிட்டது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் சீனா தொடர்புபடுத்தும் இந்த பேரிடரால் 90,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
நாள்பட்ட உள்நாட்டு மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும், தெற்கு அண்டை நாடான இந்தியாவிற்கு மின்சாரத்தை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், தனது இமயமலை நீர் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அந்த மலைப்பாங்கான நாடு முயன்றதால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நேபாளத்தில் நீர்மின் திட்டங்களில் ஒரு பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் மலைப்பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்களுக்கு, செங்குத்தான நிலப்பரப்பின் வழியாக நீரை எடுத்துச் செல்ல சுரங்கப்பாதைகள் தேவைப்படுகின்றன.
இமயமலை ஆறுகளுக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இடையே உள்ள செங்குத்தான உயர வேறுபாட்டைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க இது உதவுகிறது.
இந்தப் பெருவெள்ளம் “முன்னெப்போதும் இல்லாத, பேரழிவை ஏற்படுத்திய ஒரு இயற்கை பேரிடர்” என்றும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டைத் தொகுப்பது சவாலாக இருப்பதாகவும் பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார்.
நேபாளத்துடனான முக்கிய எல்லைக் கடப்புப் பகுதிக்கு அருகிலுள்ள திபெத் பகுதியில், 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
நேபாளப் பகுதியில் சுமார் 100 சீனக் குடிமக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் திங்களன்று தெரிவித்தார்.
காணாமல் போனவர்களைத் தேட முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல், அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுதல், அபாயங்கள் மற்றும் மறைந்திருக்கும் ஆபத்துகளைக் கையாளுதல் மற்றும் அவசரக்கால மேலாண்மைத் திறன்களை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றைச் சீன அமைச்சரவைக் கூட்டம் வலியுறுத்தியதாக அரசுத் தொலைக்காட்சியான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.












