துபாயில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பின்னர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்திய மகளிர் அணி மறுத்துவிட்டது.
இதன் மூலமாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் தொடரில் இந்திய ஆண்கள் அணியினர் மேற்கொண்ட அதே நிலைப்பாட்டை இவர்களும் பின்பற்றினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரான நக்வி அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.

கிண்ணத்தை வழங்கும் விழாவைப் புறக்கணிக்க அணி எடுத்த முடிவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான மோசமான அரசியல் உறவுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஒரு குறுகிய கால இராணுவ மோதலில் ஈடுபட்டன, அது கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போராக முற்றியது.
இரு நாடுகளும் கிரிக்கெட்டில் இருதரப்புப் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடுவதில்லை; நடுநிலையான மைதானங்களில் நடைபெறும் ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் மட்டுமே சந்திக்கின்றன.
நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவு நாட்டின் கிரிக்கெட் வாரியத்தால் எடுக்கப்பட்டதாக இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் துபாயில் நடந்த ஆடவர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகும், நக்வியிடமிருந்து கிண்ணத்தை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
கிண்ணம் வழங்கப்படும் தருவாயில், பரிசளிப்பு விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு, பின்னர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தொடரின் இறுதிப் போட்டியில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை, இந்திய மகளிர் அணி 2024-ஆம் ஆண்டு சாம்பியனான இலங்கையை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 சீசன்களில் எட்டாவது முறையாக கண்டத்தின் பட்டத்தை வென்றது.
போட்டிகளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஆசியக் கிண்ணத்துக்கான குழுச் சுற்றில் பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியபோது, இந்திய மகளிர் அணியும் இதே நடைமுறையைப் பின்பற்றியது.
ஜப்பானில் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் தொடர்களின் அடுத்தடுத்த சுற்றுகளில் இவ்விரு அணிகளும் மோதக்கூடும்.















