கொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான சம்பவம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த வளாகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள பீட்சா உணவகத்தில் இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த உணவகத்தின் பிரதான சமையல்காரர் மற்றும் கலால் அதிகாரி ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பொது கலால் அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கலால் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அறிக்கை இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.