கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தக் குழு தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் விவரங்களை வெளிக்கொணர அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
அந்தக் குழு அடையாளம் காணப்பட்டதா, தடை செய்யப்பட்டதா அல்லது கைது செய்யப்பட்டதா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.
“இந்த நேரத்தில், கிழக்கு மாகாணத்தில் செயல்படும் அத்தகைய குழு பற்றிய தகவல்களை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம். புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த விடயத்தை சரிபார்த்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்பதை இப்போது நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார்.