ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது.
இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான அதிகபட்ச வருகையாகும்.
இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்த 23இலட்சத்து 33ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை இன்றைய தினம் முறியடிக்கப்பட்டு இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் 23இலட்சத்து 33ஆயிரத்து 797 ஆவது சுற்றுலாப் பயணி இன்று காலை வரவேற்கப்பட்டதாக இலங்கை சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.
‘டித்வா’ புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியானது நாட்டின் சுற்றுலாப் பயணத்தில் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமைவதுடன், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை மீதான நம்பிக்கையையும் அதன் மீண்டெழும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது.

















