வாட்ஸ்அப் பயனர்களின் சாட்களை மெட்டா நிறுவனம் கண்காணித்து வருவதாக உலக நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கும் தொடுத்துள்ளனர்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு ‘எண்டு-டூ-எண்ட்’ என்கிரிப்ஷன் என்ற போலியான அம்சத்தை அறிவித்து பயனர்களை ஏமாற்றியதாக சொல்லி அமெரிக்காவில் அந்நிறுவனத்துக்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.
‘எண்டு-டூ-எண்ட்’ என்கிரிப்ஷன் அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் மெசேஜை அனுப்பும் பயனர், அதை பெறுகின்ற பயனர் மட்டும் பார்க்க முடியும் என மெட்டா சொல்லி வருகிறது. இந்த சூழலில்தான் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் தொடர்பு விவரங்களை சேமித்து, பகுப்பாய்வு செய்து, அதை விர்ச்சுவலாக அக்சஸ் செய்யவும் முடியும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வாட்ஸ்அப் பயனர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.



















