பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மன்னர் சார்லசுக்கு கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.
1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகத்தை மூட அது அமைந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகமான வீராஸ்வாமி உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் விருந்தோம்பல் துறையினர் கோபமடைந்துள்ளார்கள்.
உணவகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தும் புகார் மனு ஒன்றில் 18,000க்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால், Crown Estate தன் முடிவை மாற்றுவதுபோல் தெரியவில்லை.
இந்நிலையில், உணவகத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினர் விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து உதவி கோர முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் மன்னரிடம் அளிப்பதற்காக உருவாக்கியுள்ள புகார் மனுவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை பாதுகாக்க ஆதரவு தருமாறும், இந்திய பிரித்தானிய கலாச்சார உறவுகளின் அடையாளமான அந்த உணவகத்தை காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சார்லி சாப்ளின், வின்ஸ்டன் சர்ச்சில், இளவரசி ஆன், டேவிட் கேமரோன், ஜோர்டான் மன்னரான அப்துல்லா ஆகியோரை உபசரித்த பாரம்பரியம் கொண்ட உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.

















