ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ரஜினி காந்தின் 174-வது படமான இது, கமல்ஹாசனுக்கு 238-வது படம்.
இது தொடர்பான தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ‘சரியான கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்’ என்று ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கூறியிருந்தனர். 40 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இணையும் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க இருக்கிறார்.
ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோ வீடியோ படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று தொடங்கியுள்ளது. இன்றும் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் இசை அமைப்பாளர் அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
















