மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட பூஜைகள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆலய முன்றலில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது.
பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமானது.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இவ்ஊர்வலம், கோவில்போரதீவு உதயதாரகை கலை விளையாட்டுக் கழக மைதானத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மைதானத்தில் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் டெ.ரேணுகா தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரன் கோபிநாத் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
மதகுருமார்கள், ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் ஆசிரியர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், கிராம மூத்த உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாச்சார உத்தியோகத்தர் ,விளையாட்டுக் கழக தலைவர்,கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
நிகழ்வின் நிறைவில், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















