அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பக்கிஎல்லை சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனையின்போது 7,500 மி.லீ கள்ளச்சாராயம், 148,000 மி.லீ கோடா,சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் செம்புச் சுருள்கள் மற்றும் பீப்பாய்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த காட்டுப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அம்பாறை 2 ஆம் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திசாநாயக்க மற்றும் பக்கிஎல்லை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயரத்ன ஆகியோரின் ஆலோசனையில், ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த அதிரடி சோதனையை செய்துள்ளனர்.







