ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த ஒக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது.
நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தார்.
வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார்.
இதை அடுத்து, ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டக்காச்சி பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளும் LDP கட்சிக்கு பெரும்பான்மை (352/465) வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சனே டக்காச்சி பெற்றுள்ளார்.
அபார வெற்றி பெற்ற சனே டக்காச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
















