சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின.
தற்போது இந்த வதந்திகளுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை.
அதற்குள்ளாகவே உங்கள் ‘வாட்ஸ்அப் தொழிற்சாலைகள்’ பல கதைகளை உருவாக்கி வருகின்றன. இனியாவது வளர்ந்து உருப்படியான வேலையைப் பாருங்கள்” என்று சாடியுள்ளார். இதன் மூலம் தான் இன்னும் படத்தில் நீடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். விவேக் ஓபராய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகி, தற்போது அந்த கதாபாத்திரத்தில் திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளார். இப்படம், 2027-ஆம் ஆண்டின் மத்தியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















