யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார்.
வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுண்ணாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுண்ணாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















