உள்நாட்டு விமான சேவைகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (Retd), தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (10) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் துறைசார் அரச மற்றும் தனியார் துறையை சார்ந்த முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்றதுடன், உள்நாட்டு விமான சேவை தொடர்பான பாதுகாப்பு விடயங்கள் மற்றும் உள்நாட்டு சிவில் விமான சேவை நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.
இம்முயற்சி, நாட்டின் சுற்றுலா துறைக்கு ஆதரவாக சீரான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன்மிக்க உள்நாட்டு விமான சேவை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமைந்தது.
இந்த கலந்துரையாடலின் போது, சிவில் விமான சேவை நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும் வகையில் தற்போதுள்ள நடைமுறைகள் குறித்த முழுமையான ஆய்வின் பின்னர், முறையான மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டம், துறைசார் அதிகாரிகள், பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் இடையே பயனுள்ள கலந்துரையாடலுக்கு வழியமைத்தது.
இதன் போது செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து திறந்த முறையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், தேசிய பாதுகாப்பு தேவைகளுடன் ஒத்திசைவுடனும் உள்நாட்டு விமான சேவையின் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் நடைமுறைசார் அணுகுமுறைகளின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை, கடற்படை, பொலிஸ் திணைக்களம், இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAASL), விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விமான உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், உட்பட உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.













