திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.
மார்ச் 6-ம் திகதி சதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தல்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது
பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, பந்தல்கால்கள் பிரகார உலாவாகக் கொண்டு வரப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி மற்றும் ராஜகோபுரம் அருகில் நடப்பட்டன.
இதில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி நியமன எம்எல்ஏ ஜி.என்.எஸ்.ராஜசேகரன், கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.சுப்பிரமணியன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
















