நடிகர் தனுஷ் – நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் வரும் பெப்ரவரி 14-ம் திகதி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. தனுஷ் – மிருணாள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புகைப்படங்களை வைத்து இப்படியான தகவல்கள் பரவின. இது தொடர்பாக இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
உண்மையில் தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணம் நடைபெறுமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை மிருணாள் தாக்கூர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை மிருணாள் தாக்கூர் கூறுகையில், “எனக்கு தெரிந்து இந்த முறை முதல் தடவையாக பெப்ரவரி 14-ம் திகதி ஏப்ரல் ஃபூல் ஆக மாறபோகிறது. யார் இதை தொடங்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் எதையும் சொல்லவில்லை. சிலர் அவர்களாகவே பதிவிட்டு, ‘மிருணாள் இதை கூறினார்’ என்று சொல்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் அச்சமூட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உண்டு. கிட்டதட்ட 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியினர் கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனிடையே தற்போது இதனை நடிகை மிருணாள் தாக்கூரே மறுத்ததன் மூலம் இந்த தகவல் வதந்தி என உறுதியாகியுள்ளது. தனுஷின் நடிப்பில் அடுத்ததாக ‘கர’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
















