நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் சஞ்சு சம்சன், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு அவர் கூறியதாவது:
“அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு என்ன மாதிரியான மனநிலை தேவை என்பதை தேடினேன். அப்போது சச்சினை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த உரையாடல் மிகவும் நெடியது.
அவரிடமிருந்து வழிகாட்டுதலும், ஆலோசனையும் கிடைக்கும் போது வேறென்ன நான் கேட்க முடியும். அதன் மூலம் நான் பெற்ற தெளிவு, ஆட்டத்துக்கான தயாரிப்பு, ஆட்டம் குறித்த நுணுக்கம் போன்றவற்றை பெற்றேன். எனக்கு ஆதரவு தெரிவித்து அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த தொடருக்கான என்னை தயார்படுத்தல் கடந்த 1-2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று சொல்லலாம். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் நான் இடம்பெற்றிருந்தேன். ஆனால், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. இருப்பினும் எனது கனவையும், அதற்கான முயற்சியை தொடர்ந்தேன். எனக்கு அப்போது வாய்ப்பு கிடைத்திருந்தால் இப்போது செய்ததைத்தான் நிச்சயம் செய்திருப்பேன். இதைத்தான் நான் சாதிக்க விரும்பினேன். இறைவனின் அருளால் அதை இப்போது செய்துள்ளேன்.
நியூஸிலாந்து உடனான தொடருக்கு பிறகு நான் உடைந்து போனேன். எனது கனவு சிதைந்தது என எண்ணி இருந்தேன். ஆனால், கடவுள் வேறு திட்டம் வைத்திருந்தார். முக்கிய ஆட்டங்களில் ஆடும் வாய்ப்பை பெற்றேன். எனது தேசத்துக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன். அந்த கனவை கொண்டிருந்த எனது துணிவை எண்ணி நான் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்” என்றார்.
இந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 321 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் சஞ்சு சம்சன். இதில் 27 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடங்கும். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 97, இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் 89 மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார். அதற்கு முன்பாக நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார்.

















