உலகப் போர்ச் சூழ்நிலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (16) உறுதியளித்தார்.
சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
உலகளாவிய மோதலில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகள், எரிபொருள், எரிவாயு மற்றும் உருளைக்கிழங்கு, வெங்காயம், சர்க்கரை, பருப்பு போன்ற முக்கிய இறக்குமதிகள் உள்ளிட்ட இலங்கையின் விநியோகச் சங்கிலிகளைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
80% உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் அனைத்து பருப்புகளும் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அரிசி கையிருப்பு மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் போதுமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் மாதத்திற்குள் வரவிருந்த நான்கு எண்ணெய் ஏற்றுமதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில், தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி டிசம்பர் 31 வரை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும், நாங்கள் நிலைமையை தினசரி கண்காணித்து வருவதுடன், விநியோகத்தைத் தொடர்வதற்காக இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.














