சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் பிரிந்த வீரசூரிய வெளியிட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவுகளின் படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் ICCPR சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாகக் கருதக்கூடாது என அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் மீறப்பட்டதாகவோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ தெரியவந்தால், விசாரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.













