டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் Friar Gate பகுதியில் இந்த விபத்து நடைபெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் தீவிரமாக காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், சம்பவ இடத்திலேயே பராமெடிக்கள் முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிசார் விரைவாக கண்டுபிடித்து நிறுத்தியுள்ளனர். அந்த வாகனத்தை ஓட்டியவர் முப்பதுகளில் இருக்கும் ஒருவராக இருப்பதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: “எங்கள் விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் டெர்பி பகுதியில் கருப்பு நிற Suzuki Swift கார் ஓடியதை பார்த்தவர்கள் எங்களிடம் தகவல் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், Friar Gate சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், Curzon Street மற்றும் Cheapside சந்திப்பிலிருந்து Ford Street வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை நீண்ட நேரம் மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் அந்த பகுதியை முற்றிலும் தவிர்க்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













