பிரித்தானியாவில் நேரடி முக அடையாளத் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கு தோல்வியடைந்ததையடுத்து, இத்தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பிரித்தானியப் பொலிஸார் பயன்படுத்தி வரும் ‘நேரடி முக அடையாளத் தொழில்நுட்பம்’ (LFR) தனிமனித உரிமைகளை மீறவில்லை என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இத்தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
லண்டன் மாநகரப் பொலிஸார் பயன்படுத்தும் இந்தத் தொழில்நுட்பம், தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானது எனக் கூறி ‘பிக் பிரதர் வாட்ச்’ (Big Brother Watch) அமைப்பு மற்றும் இளைஞர் நலப் பணியாளர் ஷான் தாம்சன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
குறிப்பாக, இத்தொழில்நுட்பம் தன்னைத் தவறாக அடையாளம் காட்டியதாக ஷான் தாம்சன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் மனித உரிமைகள் இத்தொழில்முறை மூலம் மீறப்படவில்லை எனத் தீர்ப்பளித்தனர்.
பொலிஸாரின் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்படுகிறது.
இன ரீதியான பாரபட்சம் காட்டுவதாக முன்வைக்கப்பட்ட வாதங்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.
இத்தொழில்நுட்பம் எப்போது, எங்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டல்கள் பொலிஸாரிடம் உள்ளன.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மனுதாரர் ஷான் தாம்சன் தெரிவித்துள்ளார்.
“கணினி செய்யும் தவறால் யாரும் குற்றவாளியாக நடத்தப்படக் கூடாது.
கடவுச்சீட்டு மற்றும் வங்கி அட்டைகளைக் காட்டியும் பொலிஸார் என்னை விடுவிக்கவில்லை.
இது ‘ஸ்டாப் அண்ட் சர்ச்’ (Stop and Search) முறையை விட ஆபத்தானது” என அவர் விமர்சித்துள்ளார்.
பொலிஸ் வாகனங்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள் பொதுமக்களின் முகங்களை ஸ்கேன் செய்யும்.
கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் முகம் ஒத்துப்போகவில்லை எனில், அந்தப் புகைப்படம் உடனடியாகவும் தானாகவும் அழிக்கப்பட்டுவிடும் என உள்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

















