தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஒன்று விமானக் கொட்டகையில் (ஹேங்கர்) மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஊடகமான 7 நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு விமானியும் அவருடன் பயணித்தவரும் உயிரிழந்ததாகவும், மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தினை அடுத்து விமானக் கொட்டகையிலிருந்து எழுந்த அடர்த்தியான கருப்புப் புகை அருகிலுள்ள பகுதி முழுவதும் பரவியுள்ளது.
மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு பெருநகர தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
















