பெரும்பாலான மக்களுக்கு, இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்வது என்பது விமானத்திலோ அல்லது படகிலோ பயணிப்பதாகும்.
ஆனால், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தம்பதியினருக்கு அது இந்தியப் பெருங்கடலின் கொந்தளிப்பான நீரில் கிட்டத்தட்ட 32 கிலோ மீட்டர் தூர நீச்சல் பயணத்தின் மூலம் சாத்தியமாக அமைந்தது.
டேனிஷ் அப்தி மற்றும் விருஷாலி பிரசாதே என்ற அந்தத் தம்பதியினர், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இந்த சவாலான நீச்சல் பயணத்தை 10 மணி 45 நிமிடங்களில் அண்மையில் நிறைவு செய்துள்ளனர்.
இந்தச் சாதனை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மே 7 அன்று, அந்த இருவரும் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து அதிகாலை சுமார் 4:30 மணியளவில் புறப்பட்டு, பாக்கு நீரிணையைக் கடந்து கிட்டத்தட்ட 32 கிலோ மீட்டர் தூரம் நீந்தி, தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் சென்றடைந்தனர்.
இந்த கடினமான பயணத்தை முடிக்க 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆனது.
இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிகள், அந்தத் தம்பதியினர் சீற்றமான அலைகள், மாறிக்கொண்டே இருக்கும் காற்று மற்றும் அவர்களை மீண்டும் மீண்டும் திசைமாற்றிய வலுவான கடல் நீரோட்டங்களுடன் போராடுவதைக் காட்டின.
கடுமையான பாதுகாப்பு மேற்பார்வையின் கீழ் இந்தக் கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பயணப் பாதை முழுவதும் ஆதரவுப் படகுகள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் நீச்சல் வீரர்களுடன் சென்றனர்.















