நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்களும் வதந்திகளும் பரவி வருகின்றன.
இந்த நிலையில் அவரது தலைமை நற்பணி இயக்கம் இதற்கு நேற்று (29) அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா தற்போது அரசியலுக்கு வருவதற்கான எந்தவித திட்டமோ அல்லது எண்ணமோ இல்லை என தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், சூர்யாவின் நற்பணி இயக்கம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் சமூக நலப் பணிகள் தொடர்ந்தும் வழக்கம்போல முன்னெடுக்கப்படும் என்றும், சமூக சேவைகளே சூர்யாவுக்கு மனநிறைவை வழங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சூர்யா நற்பணி இயக்கக் கூட்டத்தில் ரா. வீரமணி வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே தவிர, இயக்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நடிகர் சூர்யா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவரது தலைமை நற்பணி இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
















