மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை வென்ற இலங்கைத் திரையுலகின் சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது கோல்டன் குளோப் விருது விழா – 2026 (9th Golden Globe Award – 2026) நிகழ்வில், “ரிவர்ஸ்டன்” (Riverston) திரைப்படத்தில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிப்புக்காக மகேந்திர பெரேரா சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அதே திரைப்படத்தில் ஆற்றிய சிறந்த நடிப்பிற்காக பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்குச் சொந்தமான UL 315 என்ற விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 4.01 மணிக்கு இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விருது வென்று திரும்பிய நடிகர்களை வரவேற்பதற்காக “ரிவர்ஸ்டன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிமந்தி போரகெ உட்பட நாட்டின் முன்னணித் திரையுலகக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
உலகின் பல்வேறு புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே விருதுகளைப் பெற்று சாதனை படைத்த திரைப்படப் படைப்புகள் மட்டுமே இந்த மலேசிய சர்வதேச விருது விழாவில் போட்டியிட அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
















