இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்ய ரஹானே (Ajinkya Rahane), தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட உணர்ச்சிகரமான காணொளி ஒன்றின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2013 இல் தொடங்கிய தனது கிரிக்கெட் பயணத்தில், இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 38 வயதான ரஹானே, தற்போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார்.
இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-ல் நடைபெற்ற வெளிநாட்டு டெஸ்ட் தொடரில்தான் அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார்.
ரஹானே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதுடன், 2024-25 சீசன் வரை மும்பை அணியை வழிநடத்தினார்.
இந்திய அணிக்காகத் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ரஹானே 38.46 சராசரியுடன் 5,077 ஓட்டங்களைக் குவித்தார்; இதில் 12 சதங்களும் 26 அரை சதங்களும் அடங்கும்.
90 ஒருநாள் போட்டிகளில், மூன்று சதங்கள் மற்றும் 24 அரை சதங்கள் உட்பட 35.26 சராசரியுடன் 2,962 ஓட்டங்களை அவர் எடுத்தார்.
மேலும், இந்திய அணிக்காக 20 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய ரஹானே, அவற்றில் மொத்தம் 375 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இந்திய அணிக்காக விளையாடியதில், 2020-21 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடரில் ரஹானே ஆற்றிய பங்களிப்புக்காக அவர் பெரிதும் நினைவுகூரப்படுவார்.
முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், ரஹானே அணியின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
முக்கிய வீரர்கள் பலரும் இல்லாத நிலையிலும், ரஹானே தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















