ரஷ்யா–உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் மேற்கு சைபீரியா பகுதியில் உக்ரைன் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஆழமான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்–ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 3,000 கிலோமீற்றர் (1,800 மைல்கள்) தொலைவில் உள்ள யமல்–நெனெட்ஸ் பிராந்தியத்தில், முக்கிய எரிவாயு உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் முக்கிய எரிவாயு உற்பத்தி மையமாகக் கருதப்படும் நோவி உரெங்கோய் மற்றும் புரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியம் ரஷ்யாவின் எரிவாயு உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தாக்குதல், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் மேற்கொண்டுள்ள மிகத் தொலைதூர தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது, மாஸ்கோவுக்கு புதிய பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பதிலடியாக ரஷ்யா, உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து இரவு நேரத்தில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல் திறன் அதிகரித்து வருவது மாஸ்கோவுக்கு ‘கனவுக்கெட்டாத தலைவலியாக’ மாறக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

















