இங்கிலாந்தில் உள்ள பிராந்திய மேயர்களுக்கு, தங்கள் பகுதிகளுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ‘சுற்றுலா வரி’ அல்லது ‘இரவுநேர பார்வையாளர் வரி’ அறவிடும் அதிகாரத்தை வழங்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளன.
இதன்படி, ஹோட்டல்கள், படுக்கை மற்றும் காலை உணவு விடுதிகள் (B&B), Airbnb போன்ற குறுகிய கால தங்குமிடங்களில் இரவு தங்கும் பயணிகளிடம் இந்த வரி அறவிடப்படலாம். குறிப்பாக, மத்திய அரசாங்கத்தால் வரி விகிதத்திற்கு எந்தவொரு உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு பிராந்தியத்தின் மேயர்களும் தங்களது பகுதிக்கு ஏற்ற விகிதத்தை தீர்மானிக்க முடியும்.
மேலும், வரியானது நிலையான தொகையாக அல்லாமல், தங்குமிடக் கட்டணத்தின் ஒரு சதவீதமாக வசூலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக சுமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் பொது சேவைகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய மேயர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எனினும், சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் துறையினர் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரிக்கு உச்சவரம்பு இல்லாததால் சுற்றுலா செலவுகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர்.

















