சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் தகவலின்படி, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ள 12 இடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், சிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை போட்டிக்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐசிசி தகவலின்படி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானதம், சென்ச்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க், கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜஸ் பார்க், ப்ளோம்ஃபோன்டைனில் உள்ள மங்காவ்ங் ஓவல், பார்லில் உள்ள போலண்ட் பார்க் மற்றும் கு-கோம்போ சிட்டி (முன்னர் ஈஸ்ட் லண்டன்) பகுதியில் உள்ள பஃபலோ பார்க் ஆகிய எட்டு இடங்களில் தென்னாப்பிரிக்கா போட்டிகளை நடத்தவுள்ளது.
சிம்பாப்வே, ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் விக்டோரியா ஃபால்ஸில் உள்ள ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்தும்.
அதே வேளையில், நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக், நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகளை நடத்தும்.
2027 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முக்கிய 50 ஓவர் தொடர் மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு வரவுள்ளது.
முன்னதாக, 2003-இல் நடைபெற்ற இத்தொடரின் எட்டாவது சீசனை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியிருந்தன.
உலகக் கிண்ணப் போட்டியின் 14 ஆவது சீசனில் உலகின் தலைசிறந்த 14 அணிகள் பங்கேற்கின்றன.
2027-ஆம் ஆண்டுக்கான ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நகரங்கள் மற்றும் போட்டியின் சின்னம் ஆகியவை அறிவிக்கப்பட்டது.
இது அந்தப் போட்டியை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டி மீண்டும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்புவதை அவர் சுட்டிக்காட்டியதுடன், அப்பிராந்தியத்தின் ஆர்வம், பன்முகத்தன்மை மற்றும் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் மறக்க முடியாத ஒரு நிகழ்வை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்கள் கிரேம் ஸ்மித், மக்காயா என்டினி, ஹசிம் அம்லா, டெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா, ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகட்சா மற்றும் நமீபியாவின் ருடால்ப் ஜான்சன் வான் வூரன் ஆகியோருடன் மைதானம் தொடர்பான வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்தியதிலிருந்து, தென்னாப்பிரிக்கா பல முக்கிய ஐசிசி போட்டிகளை நடத்தியுள்ளது.
அவற்றில் 2007-இல் நடைபெற்ற முதல் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணம், 2023-இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணம், 2020 மற்றும் 2024-இல் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணங்கள் மற்றும் 2023-இல் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணம் ஆகியவை அடங்கும்.
2003 உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்திய சிம்பாப்வே, மீண்டும் போட்டியை நடத்தும் நாடாகத் திரும்புகிறது.
அதே நேரத்தில், நமீபியா தனது முதல் ஐசிசி பெரிய போட்டியை நடத்தவுள்ளது.
இந்த இரு நாடுகளும் அண்மையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்தின.
2027 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 57 போட்டிகள் இடம்பெறும்.
இது, போட்டித்தன்மையை அதிகரித்தல், ஆட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தல் மற்றும் ரசிகர்களுக்கு மேலும் ஈர்க்கக்கூடிய ஒரு போட்டி அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய மூன்று-கட்ட வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.
இப்போட்டித் தொடரானது, தரவரிசையில் கடைசி மூன்று இடங்களில் (12 முதல் 14 வரை) உள்ள அணிகள் பங்கேற்கும் ‘சூப்பர் சீரிஸ்’ (Super Series) சுற்றுடன் தொடங்கும்.
இதில் அணிகள் ‘ரவுண்ட்-ராபின்’ (round-robin) முறையில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.
அடுத்த சுற்றில் 12 அணிகள் தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ‘ரவுண்ட்-ராபின்’ (round-robin) முறையில் போட்டியிடும்.
ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், இரண்டு குழுக்களிலும் நான்காவது இடத்தைப் பிடித்த அணிகளில் சிறந்த அணியும் ‘சூப்பர் 7’ சுற்றுக்குத் தகுதி பெறும்.
‘சூப்பர் 7’ சுற்றில் மொத்தம் 21 ரவுண்ட்-ராபின் (round-robin) ஆட்டங்கள் நடைபெறும்.
இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பிடிக்க, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணி நான்காமிடத்தில் உள்ள அணியையும், இரண்டாம் இடத்தில் உள்ள அணி மூன்றாமிடத்தில் உள்ள அணியையும் எதிர்கொள்ளும்.














