தலவாக்கலை ஊடாக பயணித்த 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர் இந்திக்க கருணாரத்ன ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது 40 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது பல்வேறு குறைபாடுகளுடன் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்களின் வருமான அனுமதிப்பத்திரங்கள் அதிகாரிகளின் பொறுப்பில் பெறப்பட்டு அவை தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் 4 தனியார் பஸ்கள் மற்றும் 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்த பின்னர் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை குறித்த வாகனங்களை இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வாகனப் பரிசோதனைகள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.












