ஐசிசியின் (ICC) முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி போட்டி, 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வதோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நேற்று (02) அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய உலகின் முன்னணி ஆறு பெண்கள் கிரிக்கெட் அணிகளை ஒன்றிணைக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடர், மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) மற்றும் வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
ஜூலை 6-ஆம் திகதியன்று நிர்ணயிக்கப்பட்ட தகுதிச் சுற்றுக்கான காலக்கெடுவின்படி, ஐசிசி மகளிர் டி20 சர்வதேச அணிகள் தரவரிசையில் தங்கள் இடங்களின் அடிப்படையில் தகுதி பெற்ற அந்த ஆறு அணிகளும் ‘ரவுண்ட்-ராபின்’ (round-robin) முறை லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெப்ரவரி 28-அன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இப்போட்டி முதலில் இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால், ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், தற்போது இப்போட்டி இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
மாற்றுப் போட்டியை நடத்தும் நாடாக இந்தியாவைப் பரிந்துரைப்பதற்கு முன்னதாக, பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் ஐசிசி ஆய்வு செய்தது.
இந்தப் பரிந்துரை செப்டம்பர் 2 அன்று ஐசிசி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
போட்டிக்கான நுழைவுச் சீட்டு தொடர்பான தகவல்கள் மற்றும் 2027 ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முழு அட்டவணை ஆகியவை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.












