புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டன் புறப்படுகிறார்.
அதன்படி, முதல்வர் விஜய் இன்று இரவு 10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் செல்லவுள்ளார்.
அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார் என்றும், மீண்டும் துபாய் வழியாக செப்டம்பர் 17 ஆம் திகதி காலை 8 மணிக்குச் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள்.
லண்டனில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்; அங்கு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்குத் தமிழ்நாட்டை ஒரு சிறந்த இடமாக அவர் முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக மாநிலத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரிட்டிஷ் தலைநகரைச் சென்றடைந்துள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் இக்குழுவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
முதலமைச்சரின் பயணத் திட்டம் மற்றும் சென்னை விமான நிலையத்திலான ஏற்பாடுகள் குறித்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டொலராக உயர்த்த டிவிகே அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அதன் பொருளாதார உத்தியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கீர்த்தனா அண்மையில் தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, வாகன உற்பத்தி நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பயணத்தின் விளைவாக முதலீட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13 அன்று சென்னையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பதவியேற்ற முதல் 110 நாட்களுக்குள், 1,02,514 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் 1,21,788 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான ஒப்பந்தங்களை 104 நிறுவனங்களுடன் மேற்கொண்டதாக அரசு தெரிவித்துள்ளது.
பெரிய அளவிலான தொழில் திட்டங்களைக் ஈர்க்கும் முயற்சியில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிடமிருந்து கடும் போட்டி நிலவும் சூழலில், தமிழகம் தனது முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
எனவே, சர்வதேச நிறுவனங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், புதிய முதலீடுகளில் கணிசமான பங்கைப் பெறவும் அரசு முயற்சித்து வருகிறது.
முதலீட்டாளர்களின் ஆர்வத்தை உறுதியான முதலீட்டு ஒப்பந்தங்களாக மாற்றுவதிலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க மனிதவளம் மற்றும் தொழில் சூழலமைப்பை வெளிப்படுத்துவதிலும் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












