வத்தளை பகுதியில் 7 இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளைக் கடத்திச் சென்ற லொறியொன்றும், சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியொன்றை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது, பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய, விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து மேற்படி சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேகத்திற்கிடமான லொறியைச் சோதனையிட்ட அதிகாரிகள், 12 பெட்டிகளில் இருந்து 7 இலட்சத்து 89 ஆயிரத்து 500 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட லொறியின் சாரதி உட்பட இரண்டு சந்தேகநபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 மற்றும் 37 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்டுள்ள போதை மாத்திரைகள் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














