இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘பாரத் சிட்டி’ குடியிருப்பு வளாகத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரிகள், தங்கள் குடியிருப்பு தொகுதியின் 9 ஆவது மாடியிலிருந்து வரிசையாகக் குதித்துள்ளனர்.பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்களும் பெற்றோரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணையில் இந்தச் சிறுமிகள் கொரிய கலாசாரம் மற்றும் கொரியன் லவ் கேம் ஆகியவற்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் விட்டுச் சென்ற 8 பக்க கடிதத்தில் “மன்னிக்கவும் அப்பா, கொரியா தான் எங்கள் உலகம், கொரியா தான் எங்களின் மிகப்பெரிய காதல்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சிறுமிகள் தங்களை இந்தியர்கள் என்று நினைக்காமல், ‘கொரிய இளவரசிகள்’ என்று கருதி வந்துள்ளனர். தங்களுக்குள் கொரியப் பெயர்களைச் சூட்டி அழைத்து வந்துள்ளனர்.
கொவிட் காலத்திலிருந்தே இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார் கூறுகையில், “அவர்கள் விளையாட்டில் மூழ்கிக் கிடந்ததால் கைபேசியை பயன்படுத்தத் தடை விதித்தேன். அது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளும் என்று நினைக்கவில்லை. எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கைபேசியில் மூழ்க விடாதீர்கள்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் சைபர் கிரைம் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.















