மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒரு பெண்ணை இளவரசர் ஆண்ட்ரூ இரவு உணவிற்கு அழைக்கலாம் என ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இடைத்தரகராக அரச குடும்பத்துடன் தொடர்புடைய டேவிட் ஸ்டெர்ன் செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ, 2010 ஆம் ஆண்டிலேயே ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தாம் உறவை துண்டித்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய மின்னஞ்சல்கள் அதன் பின்னரும் எப்ஸ்டீன், அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
மேலும், 2017 ஆம் ஆண்டு விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இரவு உணவு விருந்துபசாரமொன்றுக்கு, இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய உதவியாளரான டேவிட் ஸ்டெர்ன், ஜெஃப்ரி எப்ஸ்டீனை அழைக்க முயற்சி செய்ததாக மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் எப்ஸ்டீனின் அழகான நண்பருடனான ஆண்ட்ரூவின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த புதிய தகவல்கள், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
















