அமெரிக்காவில் பணிபுரியும் H-1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலையிழந்தால் வழங்கப்படும் 60 நாள் சலுகைக் காலத்தை (Grace Period) ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முன்மொழிந்துள்ள இந்த புதிய விதிமுறைகளுக்கான முன்வரைவு, தற்போது மேலாண்மை மற்றும் வரவுசெலவு அலுவலகத்தின் (OMB) பரிசீலனையில் உள்ளது.
இந்தத் திட்டம் இறுதியாக உறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால், வேலையிழக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மேலும், அந்நாட்டிற்குள்ளேயே வேறு புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கோ அல்லது வீசா வகையை மாற்றுவதற்கோ வழங்கப்பட்டு வந்த வாய்ப்புகளும் பறிபோகும்.
2017-ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ள இந்த விதியின்படி, வேலையிழக்கும் வெளிநாட்டு நிபுணர்களுக்கு வேறு வேலை தேட அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளின்படி, அனுமதிக்கப்படும் H-1B விசாக்களில் 71% இந்தியர்களுக்கே கிடைப்பதால், இப்புதிய சட்ட மாற்றத்தால் அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 52 லட்சம் இந்திய வம்சாவளியினரும், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஊழியர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
















