பிரித்தானியாவில் எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஏற்படக்கூடிய ஓட்டுநர் தட்டுப்பாடு அச்சத்தால், ரயில் ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 18-ஆகக் குறைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரிட்டனில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி (apprenticeship) வாய்ப்புகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுநர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருவது குறித்த கவலைகளைத் தொடர்ந்து, 18 வயதுடையவர்கள் விரைவில் ரயில்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைப்பதற்கான சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை (DfT) அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மாற்றம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நான்கில் ஒரு பங்கு ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 30 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் 25-ல் ஒருவர் மட்டுமே உள்ளனர் எனவும் மேலும், ஓட்டுநர்களில் 9-ல் ஒருவர் மட்டுமே பெண்கள் எனவும் சிறுபான்மையின இனத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களின் விகிதம் 13%-க்கும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் 18 வயதுடையவர்கள் ஏற்கனவே லண்டன் சுரங்க ரயில்கள் (Tube trains) மற்றும் பேருந்துகளை ஓட்ட அனுமதிக்கப்படுவதால், இந்த மாற்றம் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையிலும் ஒரு “சமமான நிலையை” (level the playing field) உருவாக்கும் என போக்குவரத்துத் துறை தெரிவிக்கின்றது.
இது சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறைக்கு இணையாக பிரித்தானியாவும் இந்த திட்டத்தை கொண்டுவரவுள்ளது.
மேலும், பள்ளி கட்டிடத் திட்டங்களில் பணிபுரியும் கட்டுமான நிறுவனங்கள், தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 13,000 புதிய இடங்களை வழங்க வேண்டும் என்பதும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













