ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து சீனாவின் வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவித்துள்ளதுடன், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் பதற்றத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம், இஸ்ரேலில் உள்ள சீனக் குடிமக்கள் நாட்டிற்குள் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவில் வெளியேற வேண்டும் அல்லது தாபா எல்லைக் கடவை வழியாக எகிப்துக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தும் அறிவிப்பை வெளியிட்டது.
ஞாயிற்றுக்கிழமை சீனாவின் வெளிவிவகார அமைச்சு, ஈரானில் உள்ள சீன குடிமக்கள் முடிந்தவரை விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.
அஜர்பைஜான், ஆர்மீனியா, துருக்கி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கான நான்கு தரைவழிப் பாதைகளை பட்டியலிட்டது.
சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இராணுவத் திறனைக் குறிவைத்து அதன் மீது தாக்குதலைத் தொடங்கின.
இந்த நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக தெஹ்ரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஒரு விமர்சனத்தில், சீனாவின் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத் தாக்குதலை விமர்சித்தது.
இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிரான வெட்கக்கேடான மற்றும் அரசியல் அதிகார மேலாதிக்கச் செயல் என்று கூறியது.
மேலும், வொஷிங்டனின் இராணுவ வற்புறுத்தலைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அப்பட்டமான மீறல் என்றும் அது சுட்டிக்காட்டியது.












