களுத்துறை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொலிஸார் உள்ளிட்ட உரிய நிறுவனங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், வரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தரவுத் தொகுப்பிற்கு எந்தவித சேதமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாகச் சீர்செய்து, தொலைதூரத் தொடர்பாடல் ஊடாகத் தரவுத் தொகுப்பு இணைப்புகளை வழங்கவும், அலுவலக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அலுவலகம் வழமைக்குத் திரும்பும் வரை, களுத்துறை பிரதேச அலுவலகத்தில் அவசர சேவைகளைப் பெற எதிர்பார்க்கும் பொதுமக்கள், தமக்கு அருகிலுள்ள பிற பிரதேச அலுவலகங்கள் அல்லது தலைமை அலுவலகத்தின் ஊடாகத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.













