தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் ஓடும் வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (Drive-by shooting) 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து லண்டன் பெருநகர பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 01:14 மணியளவில் பிரிக்ஸ்டனில் உள்ள கோல்ட்ஹார்பர் லேனில் (Coldharbour Lane) பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 25 வயதுடைய கீனு டெய்லர் (Keanu Taylor) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் 21, 47 மற்றும் 70 வயதுடைய மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்கள் அல்லது இது தொடர்பான காணொளிப் பதிவுகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரையோ அல்லது ‘Crimestoppers’ அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.














