2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தேர்தலில் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் படு தோல்வியடைந்தது.
மாநிலத்தின் 294 இடங்களில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில், வாக்குகள் பலவந்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், முழு வாக்குப்பதிவு செயல்முறையும் முறைகேடாக நடத்தப்பட்டதாகவும் நம்புவதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து, தாம் இராஜினாமா செய்யப் போவதில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நேற்று (05) கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கட்சி தோல்வியடையவில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய பானர்ஜி, அது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு “இருண்ட அத்தியாயத்தை” உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
மம்தா பானர்ஜியின் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அவர் இராஜினாமா செய்தாலும் செய்யாவிட்டாலும், அதன் பிறகு இந்த அவையில் யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று பாஜக கூறியுள்ளது.
அதேநேரம், மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் தனது முதல் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளையும் பாஜக செய்து வருகிறது.













